Home
Archive for
2016
சாத்வீகமும் சாத்தானும்
சாத்தானின் சதைத் துணுக்கு நூல்
வெளியாவதற்கு முந்தைய நாள் அசோகமித்திரனை சந்திக்க நண்பர் ஒருவருடன் சென்றிருந்தேன்.
காலியான அறையில் படுக்கையின் ஒரு மூலைக்கருகில் இருந்த நாற்காலியில் அமர்ந்திருந்தார்.
உள்ளே சென்றமர்ந்தவுடன் என் உடன் வந்தவரை பற்றி விசாரித்தார். ராஜன் என அறிமுகமாகிக்
கொண்டபின் ராஜனிடம் என்னைப் பற்றி குறிப்பாக நான் பணிபுரியும் கேடர்பில்லர் பற்றி பேச
ஆரம்பித்தார். அதன் தொழில் ரீதியான போட்டியாளர்களான ஜான் டீர் கம்பேனியின் வளர்ச்சி
பற்றி பேச ஆரம்பித்தார். உழவு தொழிலில் அவர்களின் நவீன கண்டுபிடிப்புகள் எப்படியெல்லாம்
இயங்கி வந்தன என்பதை மிக நுட்பமாக பேசினார். அப்பேச்சினூடே வார்தாவின் தாக்கமும் அதிலிருந்து
தெரு மீண்ட கதையும் குழந்தையின் போக்கில் அவர் வாயினின்று கேட்க முடிந்தது. குறிப்பாக
சொல்ல வேண்டுமெனில் மரத்தை பேண்ட் சா (இயந்திர ரம்பம்) அறுக்கிறது என்பதை அதன் சப்தத்தை
எழுப்பிக்கொண்டே ஆச்சர்யமென வியந்தார்.
சட்டென நினைவுகள் திரும்பி நாங்கள்
வந்ததன் நோக்கத்தை கேட்டறிந்தார். நூலை கொடுத்தவுடன் சிறிதும் மௌனமின்றி,
“சாத்தானா சாத்வீகமா எதாவது பேரு
வச்சிருக்கலாமே”
நூலின் பதிப்பகம் சார்ந்த விஷயங்களை
கேட்க ஆரம்பித்தார். இடையில் அலைபேசி அழைப்பு வந்தமையால் பேச்சு தடம் மாறிப் போனது. பெயர்கள் சார்ந்த அவரின் நுண்ணிய உணர்வை இம்முறைச்
சந்திப்பில் நன்கு உணர முடிந்தது. அழகிய சிங்கர் எனும் பெயரில் இருக்கக்கூடிய கடின
வசீகரத்தையும் ராஜன் எனும் பெயரில் இருக்கும் சுருங்கிய தன்மையையும் அவரின் முக பாவனைகளிலேயே
காண முடிந்தது.
என்னுடைய அப்பாவையும் யாரோ ஒருவருடைய
அப்பாவையும் ஆள் மாற்றி மனதில் பதிய வைத்திருந்தார். என்னிடம்
“உன் அப்பா தானே உனக்கு சமைச்சிண்டு,
அவரும் சாப்டுண்டு இருக்கார்”
இல்லை எனப் புரிய வைத்தவுடன்,
“இங்க சென்னைல ஒருத்தர் இருக்கார்.
அவா வீட்ல வொய்ஃப் வேற ஊர்ல இருக்கா. அவர் தான் பையனுக்கு சமைச்சிட்டு அப்பறமா வேலைக்கும்
போய்ட்டு வர்றார்,. ம்ம் இப்படியும் இந்த ஊர்ல மனுஷாள் இருக்கா” எனச் சொல்லிவிட்டு
கடைசியாக இருவரிடமும்,
“பாத்தியா கேடர்பில்லர், ஜான்
டீர ஞாபகம் வச்சிகறதுல எனக்கு பிரச்சினையே இல்ல. மனுஷாள தான் குழப்பிக்கறேன்” என்று
சிரிக்க ஆரம்பித்தார்.
பேச்சு மீண்டும் தடம் மாறிய பொழுது
தமிழ் இந்துவில் வந்த கட்டுரைகள் சார்ந்து ஓர் கேள்வி கேட்டிருந்தேன். அவர் வேளச்சேரியிலிருந்து
வீடு மாற்றிய பொழுது பல நூல்களை நண்பர்களுக்கு அளித்ததாக எழுதியிருந்த ஞாபகம். அதை
எனக்கு ஒரு மின்னஞ்சல் போட்டிருந்தால் வந்திருப்பேனே என அசட்டுத் தனமாக கேட்டேன். அதற்கு
அவர் சொன்ன பதில் என்னை வியக்கவே செய்தது. அனைத்து நூலையும் கொடுக்கவில்லை. குறிப்பாக
தெஸாரஸை கொடுக்கவில்லை என்றார். சொன்னதோடு நில்லாமல் தெஸாரஸ் ஒரு வார்த்தைக்கான அர்த்தத்தை
எப்படியெல்லாம் கொடுக்கிறது, முதன் முதலில் இவற்றையெல்லாம் தொகுத்தது யார், எழுத்தாளனுக்கு
தெஸாரசின் தேவை என்ன என்று பேசினார். கைகளில் நூலைக் கொடுத்தும் பொறுப்பற்ற எழுத்தாளனாக
இருக்கிறோமோ எனும் குற்றாவுணர்ச்சி தன் மெல்லிய நிழலை என்மீது படரவிட்டு சென்றது. சிறிய
மௌனத்தை கலைத்தவாறு,
“சரி வயித்தெறிச்சல் படாத உனக்கும்
புக்கு தர்றேன்” என இருவருக்கும் கை(பை) நிறைய புத்தகங்கள் கொடுத்துவிட்டார்.
காலை உணவை சாப்பிடும் பொழுது
அவருடைய எழுத்து சார்ந்த பேச்சினை பேச ஆரம்பித்தோம். ராஜன் தான் வாசித்த குறுநாவலை
குறிப்பிட்டு அந்த கதையின் புரிபடாத் தன்மையை புரிந்துகொள்ள முயன்றார். இதனூடே அடியேனால்
சிறு தர்க்கமும் எழுந்தது. எல்லா வடிவங்களிலும் நேர்த்தியை அசோகமித்திரனால் எப்படி
செய்ய முடிந்தது என்பதே என் தர்க்கத்தின் நோக்கமாக அமைந்தது. அப்போது முக்கியமான விஷயமொன்றை
பகிர்ந்தார். அஃதாவது அவருடைய கரு எவ்வடிவத்தை எடுத்துக் கொள்ள வேண்டும் என்பதை அக்கருவாகவே
முடிவு செய்கிறது. அதை மாற்ற முனையும் தருணத்தில் திருப்தி ஏற்படாது. மேலும் அனைத்து
எழுத்தாளர்களிடமும் ஒரு ஸ்டாண்டர்ட் இருக்கிறது. ஒவ்வொரு வடிவத்திலும் அதை தொட்டுவிட்டால்
அது அவரளவில் நல்ல கதையாகவே இருக்கும். போதனையாக அமைந்தது அவ்வார்த்தைகள்.
கிளம்புவதற்கு முன் போட்டோ எடுக்க
கேட்டோம். அவரும் சம்மதிக்க நூலுடன் நான் முதலில் எடுத்துக்கொண்டேன். பின் ராஜன் அவரருகில்
அமரும் பொழுது நூலினை அசோகமித்திரன் கைகளில் இருந்து எடுத்துக் கொண்டேன். அப்போது அவர்
ராஜனிடம்,
“உங்கிட்ட புக் இருந்தா குடு.
இல்லையா ? முகம் மட்டும் தான் இருக்கா ?”
வயோதிகம் கொடுக்கும் அழகு எழுத்தாளனைப்
பொறுத்தவரை அலாதியான ஒன்றுதான். வாழ்வின் ஒவ்வொரு தருணத்திலும் வாழ்க்கையின் அங்கதத்தை
சுமக்கிறவராகவே அசோகமித்திரன் எனக்கு தெரிகிறார்.அவருக்கு நூலை சம்ர்ப்பணம் செய்வதில் பெருமகிழ்ச்சி
கொள்கிறேன். நூலின் வழியே எனக்கும் ராஜனுக்கு கிடைத்தது மகத்தான ‘எளிமையின்’ தரிசனமாக
இருந்தது.
பி.கு 1: அசோகமித்திரன்
lighting ஐ பொறுத்து இடத்தை சொல்ல அழகுற போட்டோ நல்கிய த.ராஜனுக்கு நன்றி.
பி.கு 2 : இப்பதிவிலும் சொல்லாமல் கடந்து சென்றுள்ள விஷயங்களே அதிகம்.
நூல் வெளியீட்டு விழா
யாவரும்
பதிப்பகம் வெளியீடாக கடந்த டிசம்பர் 23 ஆம் தேதி எழும்பூர் இக்சா மையத்தில் சிறுகதை
நூல்களின் வெளியீட்டு நிகழ்வு நிகழ்ந்தது. எனது “சாத்தானின் சதைத் துணுக்கு” நூலுடன்
தூயன் எழுதிய “இருமுனை”, வ.கீரா எழுதிய “மோகினி” , விஜய் மகேந்த்கிரனின் “நகரத்திற்கு
வெளியே” ஆகிய நூல்களும் வெளியாகின. நூலினை வெளியிட்டு எஸ்.ராமகிருஷ்ணன் நூல்களை சார்ந்தும்,
தமிழ் சிறுகதைகளின் நூற்றாண்டினை முன்னிட்டு தமிழ் சிறுகதைகளின் போக்கினையும் விரிவாக
பதிந்திருந்தார்.
வெளியீட்டு
நிகழ்வில் மட்டற்ற மகிழ்ச்சியில் திளைத்திருந்தேன். நிகழ்வு முடியும் தருணத்தில் சாத்தான்
என் முதுகின் மேல் இனி செய்ய வேண்டிய கடமைகளை சிலுவையென சுமக்க வைத்துவிட்டது. நிறைய
எழுத வேண்டும் எனும் உந்துதலையும், அதைவிட பன்மடங்கு வாசிக்க வேண்டும் எனும் வெறியையும்
ஆழமாக விதைத்து சென்றிருக்கிறது வெளியீட்டு நிகழ்வு.
அழைப்பை
ஏற்று அலுவலகத்திலிருந்து வந்திருந்த நண்பர்களுக்கும், சொற்களால் ஆசீர்வதிக்கப்பட்ட
வாசகசாலை அன்பர்களுக்கும், யாவரும் பதிப்பகத்தின் வழியே அறிமுகமான புதிய நெஞ்சங்களுக்கும்
நன்றியை பகிர்ந்து கொள்கிறேன்.
புகைப்படங்களையும்
காணொலிகளையும் விரைவில்(கிடைத்தவுடன்) பகிர்கிறேன். . .
பி.கு
: சாத்தானின் சதைத் துணுக்கு நூல் தேவைப்படுவோர்
அழைக்கவும் (கதிரேசன் சேகர்)8489401887.
VPP அல்லது India Post மூலம் புத்தகம் உங்கள் இல்லம் தேடி வரும்.....
கண்டவர் விண்டிலர்
லா.ச.ராமாமிருதத்தை படைப்பிலக்கியம்
வழியாக மட்டுமே அறிவேன். அவர்
சார்ந்து நான் கொண்ட தேடலும்
பிறர் மூலம் எனக்கு கிடைத்த
அறிமுகங்களும் கூட அவருடைய படைப்பிலக்கியம்
சார்ந்தே அமைந்திருந்தது. சாஹித்ய அகாதெமி விருது
அவருடைய “சிந்தா நதி” எனும்
நூலுக்கு தான் கிடைத்தது. அது
படைப்பிலக்கியம் அன்று. நினைவலைகளின் தொகுப்பு.
படைப்பிலக்கியத்தில் மொழியின் கட்டற்ற பயணத்தை தடை
செய்யாமல் அதன் இஷ்டத்திற்கு பயணம்
செய்ய விட்டிருப்பார். லா.ச.ராவின்
படைப்புகள் கண்களை மூடி லயித்து
செல்லும் இசையின் கனம். அவரின்
கட்டுரைகள் எப்படியிருக்கும் என்பது என் கற்பனைக்கு
சாத்தியமற்றதாக இருந்தது. இந்நிலையில் அவருடைய பாற்கடல் எனும்
கட்டுரைத் தொகுப்பை வாசிக்க நேர்ந்தது. இந்நூலும்
கிட்டதட்ட அவருடைய நினைவலைகள் தான்.
எழுத்தாளனின்
வாழ்வியல் அனுபவங்களை வாசிப்பதும் கேட்டறிவதும் அலாதியான சுகம். மேற்கொள்ளும்
பயணங்களும் அதன் வழியே காணக்கிடைக்கும்
மனிதர்களும் சாமான்ய வாசகனான எனக்கு
பொறாமையையே மேலெழும்பச் செய்யும். இதைத் தாண்டிய வேறொரு
விஷயம் என்னை எப்போதும் வியப்புற வைக்கும். சாமான்ய மக்கள் சந்திக்கும்
அல்லது அனுபவிக்கும் பல சந்தர்ப்பங்கள் எழுத்தாளனின்
வாழ்விலும் அரங்கேறுகிறது. ஆனால் அதிலிருந்து அவன்
வரும் முடிவுகள் அவனை மேம்படுத்தியவனாக அல்லது
ஞானவானாக காட்டுகிறது. படைப்பிலக்கியவாதி சமூகத்திற்கு ஒருபோதும் உபதேசம் செய்வதில்லை. மாறாக
உபதேசங்களின் உருவகமாக கதாபாத்திரங்களை மக்களிடையே அசை போட உலவவிடுகிறார்கள்.
அப்படி லா.ச.ரா
உலவவிட்ட பாத்திரம் தான் அபிதா. லா.ச.ரா என்றாலே
இலக்கிய வாசகனின் நினைவலைகளில் அதிர்வுகளாய் எழும் வார்த்தை அபிதா.
லா.ச.ராவின் தனிப்பட்ட
வாழ்க்கை எப்படி இருந்திருக்கும் ? எங்கிருந்து
இப்படியான பாத்திரங்களையும் நாவல்களையும் அவரால் புனைய முடிந்தது
என்பதை அறிய இந்நூல் சிறு
உதவி புரிகிறது. வெறும் சுயசரிதையாக இந்நூல்
முடிந்துவிடாமல் இலக்கியத்தின் உள்ளே தனி மனிதனின்
தேடல் எப்படி விஸ்தீரணம் கொள்கிறது
என்பதையும் விளக்குகிறது. தனி மனித அனுபவங்களுக்காக
இலக்கியமும் இலக்கிய நேர்த்திக்காக தனி
மனித அனுபவங்களும் எப்படி வளைய வேண்டியிருக்கும்
என்பதையும் எழுதிய அனுபவங்களின் வாயிலாக
விளக்கியிருக்கிறார்.
அதற்கு
பாற்கடல் எனும் பெயர் அமையவும்
காரணம் அவர்வசம் இருக்கிறது. அமுதசுரபி இதழில் தொடராக வந்ததே
இந்த பாற்கடல். அசுரர்களும் தேவர்களும் பாற்கடலை கடைகின்றனர். தேவர்களுக்கு அமிர்தம் கிடைக்கிறது. சிவனுக்கு விஷம் கிடைக்கிறது. ஆனால்
அசுரர்களுக்கு எதுவுமே கிடைப்பதில்லை. நியாயம்
சொல்பவனிடத்திலிருந்து தான் உருவாக்கப்படுகிறது. அதையே
அவர் சொல்கிறார்,
“அன்றிலிருந்து
இன்றுவரை நியாயங்கள் பாற்கடலின் பங்குகளாய்த்தான் நடைபெற்று வருகின்றன”
இந்த நியாயத்தை இக்கட்டுரைத்தொகுப்பிலேயே பல இடங்களில் தர்க்கம்
செய்ய முனைகிறார். ஆங்காங்கே what is truth ? எனும் கேள்வி வாசிப்பில்
தட்டுப் பட்டுக் கொண்டே வருகிறது.
வாழ்க்கையில் உண்மை என்பதை யாராலும்
அறிய முடியாது. எல்லாமே தருணங்கள். அத்தருணத்தில்
எவன் பார்வைக்கு எது உண்மையோ நியாயமோ
அதுவே உண்மையும் நியாயமும். இந்த பார்வையை கட்டுரை
எனும் அளவில் மட்டுமே வைக்காமல் நாவலிலும் வாழ்க்கையினூடே சந்தித்த மனிதர்களின் வழியேவும் கண்டுகொண்டிருக்கிறார்.
இந்நூலின்
வழியே அவர்தம் வாழ்வில் பெரியோர்
என மதித்த சில மனிதர்களின்
வாழ்வியல் தருணங்களை எழுத முயன்றிருக்கிறார். அது
தன் எழுத்தில் எப்படி தாக்கம் செய்திருக்கிறது
என்பதையும் விளக்கி செல்கிறார். இதனிடையே
எழுத்தாளன் எனும் அளவில் சமூக
மதிப்பீடுகளை அவர் காணும் விதம்
ஆச்சர்யமுற வைக்கிறது. லா.ச.ராவின்
கதைகளை புரியவில்லை எனவும் பிடித்திருக்கிறது எனவும்
கடிதங்கள் வந்து கொண்டிருந்த பொழுது
அவருடைய வார்த்தைகள் இப்படி அமைகின்றன,
““பிறருடைய
போற்றுதலுக்கும் தூற்றுதலுக்கும் என் எழுத்து அப்பாற்பட்டது”
என்று எழுத்தாளன் சொல்லிக் கொள்ளலாம். அது ஒரு கட்டத்துக்குப்
பின் உண்மையாகவுமிருக்கலாம். ஆனால் எழுத்தாளனும் மனுஷன்தான்.
“என் எழுத்து அத்தனையும் மாணிக்கம்;
வாசகர்கள் அதற்கு லாயக்கற்றவர்கள்” என்று
சாதிக்காமல், தர்க்கம் முற்றினால் கோதாவில் இறங்காமல், தன் எழுத்தில் தன்னம்பிக்கையை
மௌனத்தில் நிலைநாட்டினால் பெரிசு. ஆனால் பாராட்டை
வேண்டாம் என்கிற மறுப்பை யாரும்
நம்ப வேண்டாம். எங்களுக்கும் முதுகு தட்டல் பிடிக்கும்,
வேணும்.”
தன் அபிலாஷைகளை வெளிப்படையாக சொல்லும் லா.ச.ரா
தன் நேர்மையை கடைசி வரை தாங்கிப்
பிடிக்கிறார். அதற்கு உதாரணம் ஓர்
வாசகர் லா.ச.ராவை
சிறுகதைகளின் பிதாமகன் என்று கூறியிருக்கிறார். அதை
அவர் ஏற்பதாயில்லை. சிறுகதைகளின் அளவீடுகளை கூறும் அதே சமயம்
பிதாமகன் எனும் வார்த்தையின் அர்த்தத்தையும்
விளக்குகிறார். எழுத்தாளன் வயதாகிறானே ஒழிய எழுத்து வயதாவதில்லை.
இந்நிலையில் தன்னை பிதாமகன் எனக்
கூறுவது தவறானது என்பதை எளிமையாக
எடுத்துரைக்கிறார். மேலும் எழுத்து எனும்
வார்த்தைக்கு அதீத முக்கியத்துவத்தை கொடுக்கிறார்.
காரணம் கதை ஒருபோதும் முடிவதில்லை.
உலகம் அழிந்துவிட்டது எனக் கூறினால் அது
அழிந்ததை சொல்ல யாரோ ஒருவன்
இருக்கிறான் என்பதாகிவிடும். ஆக கதைகள் ஒருபோதும்
முடிவதில்லை. மாறாக எழுத்து அந்த
தருணங்களை எழுதிக் கொண்டே இருக்கிறது.
நூலின் பல இடங்களில் இந்த
எழுத்திற்கு விளக்கம் கொடுக்க முனைகிறார். அதில்
ஒன்று,
“எழுத்து
ஒரு சின்னம்மை, அரிப்பு மாதிரி. அது
வராதவர்களே கிடையாது. ஆனால் எத்தனை பேர்
குடலிலேயே போட்டுக்கறது, ஜ்வாலையாக வளர்ந்து அவர்களிலும் எத்தனை பேரை எரிக்கறது.
அதிலும் எத்தனை பேரை எரித்துக்கொண்டேயிருக்கிறது
என்பதுதான் கேள்வி”
எழுத்தை
கூறும் அதே நேரம் அதன்
உட்பிரிவுகளை மிக அழகாக விவரிக்கிறார்.
கட்டுரை என்பது எப்படி அமைய
வேண்டும், எவற்றையெல்லாம் அது தன்னுள் சேர்த்துக்
கொள்ள வேண்டும், கட்டுரைகளிடையே பிரிவுகளாக இருக்கும் விஷயங்கள் என்ன, அவற்றிற்கு எழுத்தாளனின்
தேவை யாதாக இருக்க வேண்டும்
என்பதை மிக நிதானமாக சொல்கிறார்.
இலக்கியம் சார்ந்து எங்கு பேச்சு வந்தாலும்
அங்கு அவர் முக்கியமாக முன்வைக்கும்
விஷயம் யதார்த்தம். யதார்த்தம் கலந்து தான் கற்பனையை
மெருகேற்றுகிறது.. வெறும் கற்பனையை வாசகனால்
ஏற்றுக் கொள்ள முடியாது என்கிறார்.
கற்பனையை
பற்றி விரிவாக கட்டுரை இதில்
இடம்பெற்றிருக்கிறது. மதுரை சர்வகலாசாலையில் 1978 ஆம் ஆண்டு
லா.ச.ராவின் எழுத்துகள்
சார்ந்த முழு நாள் கருத்தரங்கு
நடைபெறுகிறது. அதில் அவருடைய கதையொன்றை
எடுத்து logical சார்ந்த தர்க்கங்களை கேட்கிறார்கள். அந்த கதையின் வரிகளையும்
எடுத்துக்காட்டி அவர் கொடுத்த விளக்கங்களையும்
சேர்த்திருக்கிறார். அங்கு கொடுத்த விளக்கங்களைத்
தாண்டி வேறு சில நுண்மைகளையும்
அவர் கூறுகிறார். குறிப்பாக அவரளவில் கற்பனை என்பது என்ன
என்று.
“ஏதோ போதனா புத்தகத்திலிருந்து படிக்கவில்லை.
எழுத்தநுபவத்திலிருந்து சொல்கிறேன். கற்பனை என்பது வெறும்
கப்பு. ‘gas’ காற்றாடி விடுவதல்ல; இஷ்டத்துக்கு கயிறு திரிப்பதல்ல. அதற்கும்
பிரமாணங்கள், பிரமாணிக்கங்கள் உண்டு. நித்தியத்துவத்துக்கு நாம் ஏற்படுத்திக்
கொண்டிருக்கும் காலவரைகளைத் தாண்டி, எண்ணத்தின் வன்மையில்,
சாதுர்யத்தில், நிகழ்ச்சியை அதன் வரம்பு கோட்டினின்று
விடுதலை செய்து, விரிவு கண்ட
அந்தத் தடத்தில் என்ன நடக்கிறது, நடக்கக்கூடும்
என்பதை அனுமானத்தில் காண்பது தான் கற்பனை.
It is not anybody’s any guess. It is calculated”
இந்த கற்பனைகளுக்கு வித்திடுவதாக அவர் வாழ்க்கையில் பார்த்த
கதாபாத்திரங்கள் அமைந்திருக்கின்றன. அவரது முழுக்குடும்பமே இலக்கியத்தில்
பாண்டித்யம் பெற்றவர்களாக இருக்கிறார்கள். அதன் வழியே சில
நபர்களின் அந்திமக் காலம் காவியத் தன்மையுடன்
அமைந்திருக்கிறது. எழுத்தை அபத்த வாழ்வின்
நினைவுமீட்டல்களின் வழியே கற்பிதமாக கொள்ளக்கூடும்
என்பதை இந்நூலின் வழியே அறிய முடிகிறது.
இதிகாசங்களையும் காவியங்களையும் சமகாலத்தில் வைத்து மதிப்பீடு செய்கிறார்கள்.
அப்படி செய்யும் தருணத்தில் சமகாலத்தில் கண்ணுறும் மனிதர்களுக்கு சமமானவர்களாக மாறுகின்றனர் காவிய புருஷர்கள். அதே
லா.ச.ராவின் வாழ்க்கையின்
வழியே வாசகன் காணும் மனிதர்கள்
வேறு வகையில் காவிய புருஷர்களாக
மாறுகின்றனர்.
அவரின்
முன்னிருந்தவர்கள் காவியத்தை மதிப்பீடு செய்கிறார்கள் எனில் லா.ச.ரா தன் சமகாலத்தவர்களை
பரிசீலனை செய்கிறார். பரிசீலனை என்பதை விட அவர்களின்
வழியே ஆன்மீகத்தை உணர்கிறார். தான் காணும் ஒவ்வொரு
மனிதனுள்ளும் இருக்கும் நம்பிக்கைகளுக்கு உளமாற செவிகொடுக்கிறார். அதற்கு
மிகச் சிறந்த எடுத்துக்காட்டாக உணர்ந்தது
டிராமைப் பற்றி அவர் எழுதிய
பகுதிகள். இக்காலத்தில் டிராமை காண முடிவதில்லை.
அப்போது அதற்காக ஊழியம் செய்தவர்களின்
வாழ்க்கையை விவரிக்கிறார். அதை முடிக்கையில் அவருக்கேயான
பாணியில் பின்வருமாறு சொல்கிறார்,
“எதிர்
எதிராக இரண்டு ட்ராம்கள் கடக்கையில்
ஒரு டிரைவரின் உதடு அசையும். எதிர்
வண்டி டிரைவரின் புருவங்கள் உயரும்; ஏதோ சேதி
பரிமாறப்பட்டுவிட்டது. எனக்கு அப்பவே தோன்றிற்று
– டிரைவர்கள் மூலம் டிராம்களே பேசிக்கொண்டன”
வாழ்வின்
வழியே சந்தித்த மனிதர்களையும், அதன் வழியே ஓடிய
கற்பனைகளையும், அதற்கு உயிரூட்ட எழுதிய
மொழியையும், அதை பயன்படுத்திய விதத்தையும்,
அதன் வழியே கண்டடைந்த தரிசனங்களையும்
நேரடியாக சொல்லாமல் பல உவமைகளின் துணை
கொண்டு உணர்த்த முயற்சிக்கும் தொகுப்பாகவே
பாற்கடல் இருக்கிறது. ஆனால் உண்மையை நோக்கிய
அவரின், அவர் படைத்த கதை
மாந்தர்களின் தேடல் முழுமையடைந்ததாக தெரியவில்லை.
அந்த உண்மையின் தேடலுக்கு அவர் கொடுக்கும் விளக்கத்தையே இப்பதிவிற்கான தலைப்பென வைத்து இப்பதிவை முடிக்கிறேன்.
வாசகசாலை இணைய இதழ்
வேகமாக
இயங்கிக் கொண்டிருக்கும் நவீனம் நிரம்பிய உலகத்தில்
இரண்டாண்டுகால இலக்கிய பயணம் சாதாரணமானது
அன்று. ஃபேஸ்புக்கின் சிறு பக்கமாக ஆரம்பிக்கப்பட்ட
வாசகசாலை எனும் இலக்கிய அமைப்பு
தன் கிளை விரித்து களச்செயல்களாக
நூல்கள் சார்ந்த விமர்சனக் கூட்டங்கள்,
படைப்பாளிகளை படைப்பை முன்னிறுத்தி கொண்டாடும்
இலக்கிய கூட்டங்கள், இலக்கிய வடிவங்கள் சார்ந்த
முழு நாள் கருத்தரங்கு, சிறுபத்திரிக்கைகளில்
வெளியாகும் சிறுகதைகளுக்கான கதையாடல் நிகழ்வுகள் என அடுத்தடுத்த பாதைகளில்
காலத்துடன் இணைந்து பயணித்து, பரிணமித்து
வந்திருக்கிறது வாசகசாலை. இப்பயணத்தின் அடுத்த தடமென இணைய
இதழை ஆரம்பித்திருக்கிறது.
முதல் இதழ் சிறுகதைகள், கவிதைகள்,
குறும்படம் சார்ந்ததொரு தொடர், சினிமா மற்றும்
திரைப்படத்தை மையப்படுத்திய ஓர் தொடர், கி.ராஜநாராயணனைப் பற்றி கார்த்திக் புகழேந்தியின்
தொடர் என பல அம்சங்களை
தன்னகத்தே கொண்டிருக்கிறது வாசகசாலை இணையதளம். முதழ் இதழிற்கு அடியேனின்
பங்கென தேவிபாரதியை நேர்காணலெடுத்தது இடம்பெற்றிருக்கறது. இந்நேர்காணல் நட்ராஜ் மகராஜ் நாவலை
மட்டுமே மையப்டுத்தி எடுக்கப்பட்டது.
வாசகசாலை
இலக்கியத்திற்காக எடுத்து வைத்த முதல்
அடியிலிருந்தே வாசகர்களுக்கு முன்னுரிமை கொடுத்து இயங்கி வந்திருக்கிறது. இவ்விணையதளமும்
அப்படியானதொரு களமே. எழுத முனைபவர்களுக்கான
ஓர் வாய்ப்பாகவும்ம் வாசிப்பின் பசி தீராத அன்பர்களுக்கு
மற்றுமொரு தளமாகவும் வாசகசாலை நிச்சயம் அமையும்.
தேவிபாரதியின்
நேர்காணலுக்கான சுட்டி - http://www.vasagasalai.com/fulldetail.php?id=19 (க்ளிக்கி வாசிக்கவும்)
Subscribe to:
Posts
(
Atom
)